search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பதி ராயுடு"

    • சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
    • கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

    இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.

    மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.

    அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ். 

    • ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது.
    • அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள்.

    ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டியில் லக்னோ - பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது. அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள். அணியில் உள்ள பெரிய வீரர்கள் எல்லோரும் மேலே ஆட்டம் தொடங்கும் முன்னரே அவுட்டாகி சென்று விடுகிறார்கள்.

    இப்படியிருந்தால் அந்த அணி வெற்றி பெறாது. அதுமட்டுமின்றி ஆர்.சி.பி அணிக்குக் கடைசி கட்டம்வரை அழுத்தத்தில் விளையாடக் கூடிய வீரர்களாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், இளம் வீரரான அனுஜ் ராவத் பிறகு தினேஷ் கார்த்திக். ஆனால் அந்த அணியில் இருக்கும் பெரிய பேட்ஸ்மேன்கள்தான் இந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆனால் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எல்லோரும் ஆட்டம் இழந்து டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தார்கள். இது இன்று மட்டும் நடக்கவில்லை. பதினாறு ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் கதை இதுதான்.

    இவ்வாறு ராயுடு கூறினார்.

    • ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமனம்.
    • நீண்ட காலகமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார். 42 வயதாகும் எம்.எஸ். தோனி இந்த சீசனுக்கு பிறகு விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இதற்கிடையில் சிஎஸ்கே-யில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இருந்தபோதிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்காக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இதனால் ரோகித் சர்மா சற்று அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

    எம்.எஸ். தோனி விளையாடாவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் ஜடேஜா உள்ளார். ஏற்கனவே ஜடேஜாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படவில்லை. இதனால் தொடரின் பாதிலேயே எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார்.

    இவர்தான் என்பதுபோல் குறிப்பிடத்தகுந்த நபர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. இந்த நிலையில்தான் ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் 36 வயதான அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்பதி ராயுடு கூறியதாவது:-

    எதிர்காலத்தில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி விட்டார். சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதேபோல் வெற்றிகளை குவித்தால் அது சிறப்பானதாக இருக்கும். சிஎஸ்கே-யில் கேப்டன் பதவியும் (எம்.எஸ். தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்றால்) அவரை நோக்கி இருக்கும். அதை பெறும் உரிமையை அவர் பெற்றுள்ளார். அணியை வழி நடத்த விரும்புகிறாரா? இல்லையா? என்பது அவரது முடிவு.

    இவ்வாறு அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    எம்எஸ் தோனி கடந்த சீசனில் மூட்டு வலியுடன் விளையாடினார். பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2025 சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அம்பதி ராயுடன் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் எம்.எஸ். தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    • கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.
    • ஆளும் கட்சியில் இணைந்த ராயுடு, ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அமராவதி:

    கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது.

    குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு மறுக்கப்பட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆளும் கட்சியில் இருந்து விலகிய சில தினங்களுக்கு ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை அம்பதி ராயுடு திடீரென சந்தித்துள்ளார்.

    இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், ஒய்.எஸ்.ஆர். கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற தனது கனவை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக யாரையும் குறைசொல்ல மாட்டேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும், என்னுடைய சிந்தாந்தமும் ஒத்துப் போகவில்லை.

    எந்த தொகுதியிலும் போட்டியிட விருப்பமில்லை. இதனால் அரசியலில் இருந்து விலக முடிவு செய்தேன். பவன் கல்யாண் கொள்கைகளைப் புரிந்துகொள்ள அவரது நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவரை சந்தித்தேன். பவன் கல்யாண் உடன் நிறைய நேரம் பேசினேன். அப்போது தனது வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றி என்னுடன் விவாதித்தார்.

    அவரது கொள்கையும், பார்வையும் என்னுடையது போலவே இருப்பதாக சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கிரிக்கெட் கடமைகளுக்காக துபாய்க்கு புறப்படுகிறேன். நான் எப்போதும் ஆந்திர மக்களுக்காக துணை நிற்பேன் என பதிவிட்டுள்ளார்.

    அம்பதி ராயுடு விரைவில் ஜனசேனா கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்.
    • தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

    திருப்பதி:

    கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார்.

    இதனையடுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது. குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டதாக கூறப்படுகிறது.

    அந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல் பரவியது.

    இந்த நிலையில் துபாயில் நடைபெற உள்ள ஐ.எல்.டி. 20 போட்டியில் பங்கேற்பதற்காக தான் அரசியலில் இருந்து விலகியதாக அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    அரசியலில் சிறிது காலம் ஒதுங்கி இருக்க விரும்புகிறேன். மேலும் தனது அடுத்த நடவடிக்கையை உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

    • அம்பதி ராயுடு கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.
    • கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமராவதி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு. 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனுடன் அவர் ஓய்வுபெற்றார்.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடனேயே அம்பதிராயுடு ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைய உள்ளார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அவர் கடந்த மாதம் 28-ந்தேதிதான் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைந்தார்.

    இந்தநிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். கட்சியில் இணைந்த 10 தினங்களிலேயே அம்பதிராயுடு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

    • அம்பதி ராயுடு இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக சென்னை அணியில் விளையாடினார்.

    திருப்பதி:

    ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியில் விளையாடினார். இந்த நிலையில் நேற்று அம்பதி ராயுடு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகத்திற்கு வந்தார்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி,துணை முதல் மந்திரி நாராயணசாமி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அம்பதி ராயுடுவுக்கு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இணைந்ததற்கான அடையாள அட்டை வழங்கினார்.

    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல்.
    • ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-இல் தன்னை இணைத்து கொண்டார்.

    ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி மற்றும் ராஜம்பேட்ட மக்களவை உறுப்பினர் பி. மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

     


    இது தொடர்பான அறிவிப்பை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கட்சியில் இணைந்த அம்பதி ராயுடுவை வரவேற்கும் விதமாக ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஐ.பி.எல். தொடரில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பல்வேறு மாநிலங்களில் கிரிக்கெட் சங்கங்களிலும் விளையாடி இருக்கிறார்.

    • 10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அம்பதி ராயுடுவுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளத்தில் போஸ்டருடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் லெஜண்டரி சிங்கம், களத்தில் இருக்கும் போது தனது 100% திறமையை கொடுக்கத் தவறுவதில்லை. உங்கள் முன்னேற்றத்திற்கு நன்றி என பதிவிட்டிருந்தனர்.

    • இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் எம்.எஸ்.தோனி ஒருவராக போற்றப்படுகிறார்.
    • பல்வேறு திறமைகள் பெற்றிருந்தாலும் தோனியின் கேப்டன்ஷிப் அதிகளவில் புகழ்பெற்றதாக உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் எம்.எஸ்.தோனியும் ஒருவராக போற்றப்படுகிறார். அதிரடியாக பேட்டிங் செய்தும், மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தும், நிறைய போட்டிகளில் பினிஷராக இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    இப்படி பல்வேறு திறமைகள் பெற்றிருந்தாலும், தோனியின் கேப்டன்ஷிப் தான் அதிகளவில் புகழ்பெற்றதாக உள்ளது. மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்தித்து, பல்வேறு தருணங்களில் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் கண்டுள்ளார்.

    இந்நிலையில், கேப்டனாக தோனி எடுக்கும் முடிவுகளை பற்றி இந்திய கிரிக்கெட்டில் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அம்பத்தி ராயுடு அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:

    வீரர்களிடம் இருக்கும் சிறந்த திறமையை தோனி வெளிக்கொணர்வார் என்பதை அனைவரும் அறிவார்கள். சென்னை அணியில் விளையாடிய சில வெளிநாட்டு வீரர்களின் திறமையை கூட தோனி சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.

    அந்தப் பண்பு அவரிடம் இயற்கையாகவே இருக்கிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவருக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த திறமையை ஆசீர்வாதமாக பெற்றிருக்கலாம்.

    பெரும்பாலான தருணங்களில் நான் நினைக்காதவற்றை எப்படி அவர் செய்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் 99.99 சதவீத தருணங்களில் அவர் சரியான முடிவுகளையே எடுத்திருப்பார். அதை அவர் நீண்ட காலமாக வெற்றிகரமாக செய்து வருகிறார்.

    அதனால் இந்திய கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கும் நபராலும் அவருடைய முடிவுகளை கேள்வி கேட்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை என தெரிவித்தார்.

    • பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
    • ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.

    நடந்து முடிந்த ஐபிஎல் கோப்பையையே கேப்டன் டோனி, ராயுடுவை அழைத்து சென்று வாங்கினார். இதன் பின் ஓய்வை அறிவித்த அம்பாதி ராயுடு சர்வதேச அளவிலான லீக் தொடர்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரிலும் விளையாட அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிலும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2017ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் மும்பை அணி நிர்வாகத்துடன் அம்பாதி ராயுடு கைகோர்த்துள்ளார். அந்த அணியில் பொல்லார்ட், டுவைன் பிராவோ உள்ளிட்டோர் ஏற்கனவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர்.
    • அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார்.

    ஐதராபாத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு விரைவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமராவதிக்கு வந்தார்.

    அப்போது அமராவதியை தலைநகராக இருக்க வேண்டுமென கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும், அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாய சங்கத்தினர் அம்பத்தி ராயுடுவின் காரை வழிமறித்தனர்.

    அவரை இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர், அவர் காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர். அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார். மேலும் அமராவதிக்கு தான் தனது ஆதரவு என்று கூறி ஜெய் அமராவதி என முழக்கமிட வற்புறுத்தினர்.

    அதற்கும் அவர் மறுத்து கண்டிப்பாக அமராவதி தான் ஆந்திராவின் நிரந்தர தலைநகராக இருக்கும் என கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். இதன் காரணமாக அமராவதி போராட்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×