என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன்.. தோனி குறித்து அம்பதி ராயுடு நெகிழ்ச்சி
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் ராயுடு விளையாடியுள்ளார்.
- 2023-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை அம்பதி ராயுடு பெற்றுக்கொள்ளுமாறு தோனி கேட்டுக்கொண்டார்.
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 மூன்று இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அணி 9-வது இடத்தில் உள்ளன. சிஎஸ்கே பேட்டிங் கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை முடித்து கொடுக்கும் தோனி கடந்த சில போட்டிகளில் அதனை செய்யமுடியவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் விளையாடிய ராயுடு, அணிக்கும் தோனிக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்மறையான செய்திகள் பரவி வந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன், இருப்பேன் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியுள்ளார்.
இது குறித்து ராயுடு கூறியதாவது:-
நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அது பற்றி கவலையில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட மாற்றம் நிகழப்போவதில்லை.
எனவே தயவுசெய்து பணம் செலுத்திய பி.ஆர்-களில் பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். பல ஏழை மக்கள் பயனடையலாம்.
என அம்பதி ராயுடு கூறினார்.






