செய்திகள்

மகளிர் 20 ஓவர் உலககோப்பை- இந்தியா- இங்கிலாந்து அரைஇறுதியில் மோதல்

Published On 2018-11-19 07:13 GMT   |   Update On 2018-11-19 07:13 GMT
மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணியும் மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றனர். #WomensT20WorldCup
கயானா:

6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்தன. தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் (‘ஏ’ பிரிவு), நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்தது.

மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் 22-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. #WomensT20WorldCup
Tags:    

Similar News