செய்திகள்

கோலியை போன்று மற்றவர்கள் ‘கவர் டிரைவ்’ ஷாட் அடிப்பார்களா?- புஜாரா

Published On 2018-08-21 11:34 GMT   |   Update On 2018-08-21 11:34 GMT
விராட் கோலியை போன்று மற்ற பேட்ஸ்மேன்கள் கவர் டிரைவ் ஷாட் அடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார். #ENGvIND #ViratKohli
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை.

இந்திய அணியின் ஸ்கோர் 224 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.



புஜாரா எதிர்முனையில் விளையாடிய விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் விராட் கோலியை போன்று மற்ற வீரர்கள் ‘கவர் டிரைவ்’ ஷாட் ஆடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் கடினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.



மேலும் சிறப்பாக விளையாடியது குறித்து புஜாரா கூறுகையில் ‘‘கவுன்ட்டி போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் உதவியது. கவுன்ட்டி போட்டி மூலம் அதிக அளவில் கற்றுக் கொண்டேன். கவுன்ட்டி போட்டியில் அதிக அளவில் ரன்கள் குவிக்காவிடிலும், சவாலான ஆடுகளத்தில் விளையாடினேன். அது எனக்கு மிகவும் உறுதியை அளித்தது’’ என்றார்.
Tags:    

Similar News