செய்திகள்
2-வது டி20: 35 பந்துகளில் அதிரடி சதமடித்து உலக சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
போபால்:
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இந்தூர் நகரில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் செய்ய முடிவெடுத்தது. ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடக்கம் முதலே பவுண்டரிகளும், சிக்சர்களுமாக அடித்த ரோகித் சர்மா இலங்கை பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் திணறினர். 35 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 8 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.
இதன் மூலம் உலக சாதனையையும் அவர் சமன் செய்தார். வங்காளதேச அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க வீரர் மில்லர் 35 பந்துகளில் சதமடித்தது உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2 சிக்சர்களை அடித்த ரோகித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்களுடன் அவுட் ஆனார்.