செய்திகள்

U-17 உலகக்கோப்பை கால்பந்து: ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்

Published On 2017-10-22 14:24 GMT   |   Update On 2017-10-22 14:24 GMT
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது காலிறுதி போட்டியில் ஸ்பெயின் 3-1 என ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கொச்சி:

இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் மாலி அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், மூன்றாவது காலிறுதி போட்டி கொச்சியில் 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் ஸ்பெயின் - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீர்ர அபெல் ருயிஸ் முதல் கோலை பதிவு செய்தார். 60-வது நிமிடத்தில் செர்ஜியோ கோமெஸ் இரண்டாவது கோல் அடித்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் ஃபெரான் ஒரு கோல் அடிக்க  ஸ்பெயின் 3-0 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் 69-வது நிமிடத்தில் ஈரான் அணியின் எஸ்.கரிமி கோல் அடித்தார். இதனால் கோல் வித்தியாசம் 3-1 என ஆனது.



அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. வருகிற 25-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மாலி அணியை எதிர்கொள்கிறது.

அடுத்ததாக கொல்கத்தாவில் 8 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதி போட்டியில் ஜெர்மனி - பிரேசில் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி 25-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
Tags:    

Similar News