இந்தியா
கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை
2010 முதல் தன்வசம் வைத்துள்ள கொல்கத்தா மாநகராட்சியை தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மாநகராட்சியின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக (கடந்த ஆண்டு மே) முடிந்தபோதும் கொரோனா பரவலால் தேர்தல் தாமதமாக அறிவிக்கப்பட்டது.
144 வார்டுகளைக் கொண்ட கொல்கத்தா மாநகராட்சிக்கு டிசம்பர் 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் அமைதியாக நடைபெற மாநகராட்சி பகுதிகளில் 23 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கொல்கத்தா மாநகராட்சியின் 144 வார்டுகளில் 4,949 வாக்குச்சாவடிகளில் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.
நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தாங்கர் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். இந்த தேர்தலில் 63.37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. மதியத்துக்குள் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு