செய்திகள்
தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா? -உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
தேசத்துரோக சட்டம் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தவறாக பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
புதுடெல்லி:
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எஸ்.ஜி.ஓம்பட்கேர், தேசத்துரோக சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ ரத்து செய்யப்படவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசத்துரோக சட்டம் மற்றும் தேசத்துரோக வழக்குகள் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசதுரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோக சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்?
மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட தேசத்துரோக சட்டம், விடுதலை பெற்ற பின்னரும் தேவைப்படுகிறதா?
தேசத்துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பது போன்று உள்ளது. விசாரணை அமைப்புகளால் தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அது வேதனை அளிக்கிறது.
இந்த சட்டம் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு போலீஸ் அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை.
தேசத்துரோக வழக்கில் தண்டனை பெறுபவர்களை பார்த்தால் அதன் எண்ணிக்கை மிக மிக குறைவு என கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.