செய்திகள்
பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்: பசவராஜ் பொம்மை

Published On 2021-05-21 04:03 GMT   |   Update On 2021-05-21 04:03 GMT
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு :

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக கடந்த 11-ந் தேதி முதல் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் காலை நேரங்களில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் கொரோனா பரவும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கர்நாடகத்தில் இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். கிராமப்புறங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் தீவிரத்தன்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் ஊரடங்கை மேலும் தீவிரமாக அமல்படுத்தும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

யாதகிரியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 5 பேர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இவ்வாறு விதிகளை மதிக்காமல் மக்கள் நடந்து கொண்டால் என்ன செய்வது?. அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 23-ந் தேதி முடிவு அறிவிப்பார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News