செய்திகள்
ராஜ்நாத் சிங்

நெருக்கடியைச் சமாளிப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன: ராஜ்நாத் சிங்

Published On 2021-05-12 03:22 GMT   |   Update On 2021-05-12 03:22 GMT
இது விமர்சனத்துக்கான நேரமல்ல. யாரும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், ஆலோசனைகள் கூறினால் அவற்றை ஏற்க மாநில அரசு தயாராகவே உள்ளது.
லக்னோ :

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஆஸ்பத்திரியை, இந்த தொகுதி எம்.பி.யான ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளை கையாளுவதில் உத்தரபிரதேச அரசு காட்டும் வேகத்தைப் பாராட்ட வேண்டும். எவரும் தவறுகள் புரிய நேரலாம். செயல்படுவோர்தான் தவறுகள் புரிவர். ஆனால் இது விமர்சனத்துக்கான நேரமல்ல. யாரும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், ஆலோசனைகள் கூறினால் அவற்றை ஏற்க மாநில அரசு தயாராகவே உள்ளது.

கொரோனா விஷயத்தில் உத்தரபிரதேச அரசின் செயல்பாட்டை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. அது சாதாரண விஷயமல்ல.

பிரதமர் நரேந்திர மோடி இந்த கொரோனா தொற்றை ஒரு சவாலாக ஏற்றுச் செயல்பட்டு வருகிறார். கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன.

பல நாடுகளுடன் பிரதமர் நல்லுறவைப் பேணியதால்தான் தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவை இந்தியாவுக்கு உதவி வருகின்றன. கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.’

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உடனிருந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கொரோனா சூழலைக் கையாளுவதற்கு செய்யும் உதவிகளுக்கு பிரதமர் மோடிக்கும், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவல் தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்றார்.
Tags:    

Similar News