செய்திகள்
பயங்கரவாதிகள் சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீ தூரம் சென்ற இந்திய படை
இந்தியாவில் ஊடுருவ பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதையை கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்றனர்.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரின் சம்பா துறையில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே நவம்பர் 22 அன்று பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 150 மீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதையை இந்திய பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானின் பகுதிக்குள் கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் சென்று சுரங்கப் பாதையை கண்டுபிடித்தனர். இது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயன்படுத்தப்பட்டதாக அரசாங்க உயரதிகாரி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் நவம்பர் 19 அன்று நடந்த நக்ரோட்டா என்கவுண்டரில் பாதுகாப்புப் படையினர் 4 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வைத்திருந்த மொபைல் தொலைபேசியைக் கைப்பற்றி அதை ஆய்வு செய்தது சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாதுகாப்பு படைகளுக்கு அது உதவியது.
இதுதொடர்பாக, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) டி.ஜி. ராகேஷ் அஸ்தானா கூறுகையில், பாதுகாப்பு படையால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மொபைல் போன்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், நவம்பர் 22 அன்று பாதுகாப்பு படை பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதையை கண்டு பிடித்தது என தெரிவித்தார்.