search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tunnel"

    • மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
    • சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஆக்சிஜன் குறைந்த சூழ்நிலையில் அதற்குள் தவித்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வருவதற்காக இடிந்து விழுந்த பகுதிக்குள் துளையிட்டு குழாய்களை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமெரிக் காவில் தயாரிக்கப்பட்ட எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

    நேற்று பிற்பகலில் அந்த எந்திரம் மூலம் துளையிட்டு 5-வது குழாயை செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த விரிசல் சத்தம் கேட்டது. இந்த இடையூறு காரணமாக மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மற்றொரு அதிக சக்தி வாய்ந்த துளையிடும் எந்திரம் விமானம் மூலம் சுரங்கப பாதை பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் துளியிடும் பணிக்கு மீட்பு படையினர் தயாராகி வருகிறார்கள். இதற்காக மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளைபோட முயற்சி செய்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் நிபுணர்கள் குழுவுடன் பிரமதர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவும் இணைந்துள்ளனர். இது தொடர்பாக பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறுகையில், 'தொழிலாளர்களை மீட்க நிபுணர்களுடன் இணைந்து 5 திட்டங்களை வகுத்துள்ளோம். ஒரே வழியில் மட்டும் முயற்சி செய்யாமல் 5 திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதில் நிபுணர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

    மீட்பு படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் மீட்கப்படுவார்கள். ஆனால் கடவுள் போதுமான அளவில் கருணை காட்டினால், அவர்கள் அதற்கு முன்பே மீட்கப்படுவார்கள்' என்றார்.

    இதன் அடிப்படையில் மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர்களை மீட்பதற்கான 5 திட்டங்கள் தொடர்பாக அவர்கள் கலந்தாலோசித்தனர்.

    இதற்கிடையே சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் சுரங்கப்பாதைக்கு வெளியே தொடர்ந்து வேதனையுடன் காத்திருக்கிறார்கள். அதில் சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    • சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    உத்திரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் சுரக்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாட்டில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் அவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அவர்களை மீட்கும் பணி 6-வது நாளாக நடந்து வருகிறது. சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சுரக்கத்துக்குள் 60 மீட்டர் நீளமும், 900 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்பு குழாய் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது.

    தொழிலாளர்கள் குழாயின் உள் வழியாக ஏறி தப்பி வருவதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு குழாயும் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது. அதன் வழியாக சுரங்கத்துக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும், காற்றை சப்ளை செய்யவும், உடல் நலம் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மருந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த குழாய்கள், தொழிலாளர்கள் இருக்கும் பகுதி வரை செலுத்துவதற்காக குழி தோண்டப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்து குழாய் செலுத்தப்பட்டதும் அதன் வழியாக தொழிலாளர்கள் தப்பி வரும் வகையில் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பணி வேகமாக நடப்பதால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவிலேயே மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகனங்களை திருப்பிவிட்டனர்.
    • மேம்பால சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கடந்த சில மாதங்களாக மழைநீர் செல்ல பணிகள் நடை பெற்றன.

    சென்னை:

    தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் பலத்த மழை இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப் பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், மாடம்பாக்கம், கோவிலம்பாக்கம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு பலத்த மழை கொட்டியது. பலத்த மழை காரணமாக ஓட்டேரி, பேரன்ஸ் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் பெரம்பூரில் உள்ள முரசொலிமாறன் மேம்பால சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகனங்களை திருப்பிவிட்டனர். ஆனால் பெரும்பாலானோர் தேங்கி தண்ணீரில் வாகனங்களை ஓட்டிச்சென்றதால் அவர்கள் வாகனங்கள் பழுதாகி நின்றன. இதையடுத்து அவர்கள் தண்ணீரில் வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்றனர்.

    இந்த மேம்பால சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கடந்த சில மாதங்களாக மழைநீர் செல்ல பணிகள் நடை பெற்றன. ஆனால் இன்று சிறிது நேரம் பெய்த மழைக்கே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மழைநீர் செல்ல முறையான பணிகள் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

    இதேபோல் அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி முன்பு மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு கடந்த சில நாட்களாக பணிகள் நடந்து வருகின்றன. பலத்த மழை காரணமாக கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்கி ஆறாக ஓடியது. மழைநீருடன் கலந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு வெள்ளமாக காட்சி அளித்தது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றமும் வீசியது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியதால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் திடீர் மழை காரணமாக மழைநீர் கால்வாய் மற்றும் மெட்ரோ ரெயில் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. இத னால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • இங்கு 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
    • மழைக்காலங்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

    ஊத்துக்குளி:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் பாளையக்காடு உள்ளது. இங்கிருந்து கோல்டன் நகர் செல்லும் பாதையில் ெரயில்வே பாலத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம், பண்டிட்நகர், எம்.ஜி.ஆர். காலனி, ஆர்.கே.ஜி. நகர், சத்யா காலனி, சூர்யா காலனி ,சஞ்சய் நகர், கருணாபுரி ஆகிய காலனிகள் உள்ளது. இவை அனைத்தும் கோல்டன்நகரை உள்ளடக்கிறது.

    ஆரம்ப காலத்தில் முட்புதர்கள் நிறைந்து தனி காடாக காட்சி அளித்தது. இந்த பகுதிக்குள் மக்கள் குடியேற மிகவும் அச்சப்பட்டனர். இன்று மக்கள் தொகை அதிகம் கொண்ட திருப்பூர் மாநகரில் இதுவும் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாளையக்காட்டில் இருந்து கோல்டன் நகர் செல்லும் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைக்காலங்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள் முதல் வாகனத்தில் செல்பவர்கள் வரை பாதையை கடக்க முடியாமல் நீந்தி செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. வயதானவர்கள் வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    அவசரத் தேவைக்காக அழைக்கும் ஆம்புலன்ஸ் கோல்டன் நகருக்குள் வருவதில்லை. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கோல்டன் நகரில் உள்ள குடியிருப்புகளின் ரோடுகள் மிகவும் மேடு பள்ளங்களாக காணப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அகல ெரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
    • அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெறு வதாக தெரியவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் முதல் பேரளம் வரை இயங்கிவந்த ெரயில் போக்குவரத்து, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. காரைக்கால் மக்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் முதல் நாகூர் வரையில் அகல ெரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், பெரும்பா லுமான வணிகர்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் முதல் பேரளம் வரையிலான ெரயில் போக்குவரத்திற்கு, கடந்த சில ஆண்டுகளாக அகல ெரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் ெரயில் நிலையம் அருகே, திருவாரூர் மாவட்ட எல்லை பகுதிகள் உள்ளது.

    காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரிலிருந்து தமிழக மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை இணைக்கும் ஜவகர் சாலையில் மக்கள் ெரயில் பாதையை கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்துதர வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்பகுதியில் சுரங்க பாதை அமைத்தால் திருவாரூர் மாவட்ட பகுதிகளான உபயவே தாந்தபுரம், மேனாங்குடி, செம்பியநல்லூர், ரெட்டக்குடி உள்ளிட்ட ஆறு பஞ்சாயத்துக்களிலும் உள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறு வார்கள் என்பதால், அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெறு வதாக தெரியவில்லை. மேற்கண்ட கோரிக்கையை வலி யுறுத்தும் வகையில், ஜவகர் சாலை அருகே, அப்பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்படோர் ஆனந்தன், துரைசாமி ஆகியோர் தலைமையில் ஒன்று கூடி, காரைக்கால்-பேரளம் அகல ெரயில் பாதையில், அம்பகரத்தூர் ஜவகர் சாலை வழியாக, சுரங்கப் பாதை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    • மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக திட்ட இயக்குநர் பேட்டியளித்துள்ளார்.
    • வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

    மதுரை

    மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மண் பரிசோதனை, வழித்தடம் போன்றவற்றை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மதுரையில் திட்ட இயக்குநர் அர்ஜூனன் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயிலுக்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து இறுதி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். திருமங்கலம் பஸ் நிலையம் அருகில், தோப்பூர், மதுரை ரெயில் நிலையம் அருகில் மற்றும் மாசி வீதிகளில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும், பழமையான கட்டிடங்கள் சேதமடையாத வகையிலும் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரை மெட்ரோ சுரங்கப்பாதை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது.

    வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை வைகை ஆற்றின் கீழ் வழித்தடம் அமைப்பது, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது சவாலான பணிகளாக இருக்கும். மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் ரெயில் மறியல் நடத்துவோம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
    • முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றத் தில் முருகப்பெருமானின் முதற்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருப்ப ரங்குன்றத்தில் சாலை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் அமைக்கப்பட்ட போது இப்பகுதியில் மேம்பாலம் தேவையில்லை சுரங்கப்பாதை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை மீறி மேம்பாலம் கட்டப்பட்டது.

    திருப்பரங்குன்றம் கோவில், காய்கறி சந்தை, திருநகரில் உள்ள பள்ளி களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவி கள் ெரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்று வந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும், ரயில்வே தண்டவாளம் மற்றும் மேம்பாலத்தை கடந்து வந்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பாதுகாப்பு கருதி ெரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை கடக்க முடியாத வகையில் தடுப்பு அமைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் அனைவரும் மேம்பாலத்தில் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும், முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

    இதையடுத்து இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.இதனை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு,

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், வியாபாரி கள் சங்கத்தினர், பொது மக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் நலன்கருதி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி கடையடைப்பு போராட்டம், 19-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

    • ராஜபாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முயற்சி நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், மூடப்பட்ட ரெயில்வே கேட்டுக்கு மாற்றாக டி.பி.மில்ஸ் சாலையையும், எதிர்ப்புற சாலையையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல் சுலபமாக ரெயில் பாதையை கடக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிகள் நிறைவேறி இடையூறில்லாத போக்குவரத்து உருவாகும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

    அந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டி உள்ளது. அந்த திட்டவரைவை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில்வே துறை தனது பொறுப்பில் சுரங்கப் பாதை நிறுவுவதற்குரிய காங்கிரீட் பாலங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகளை முற்றிலும் கைவிடும் முயற்சிகள் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கையறு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நகரின் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளன. மாணவர்கள், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகள் தாமதம் காரணமாக துவண்டு போய் கிடக்கும் நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    இந்தநிலையில் உள்ளாட்சி மக்கள் மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன நிர்வாகங்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டம் கை விடப்படுவதை தடுத்துநிறுத்தி, சுரங்கப் பாதை திட்டத்தை எந்த தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என ராஜபாளையம் ரெயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்
    • மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ெெரயில் நிலையத்தில் ரூ.1 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டும் கட்டமான பணியை ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அங்கிருந்து ஒப்பந்ததாரர்களிடமும், அதிகாரியிடமும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் எம்எல்ஏ மற்றும் ெரயில்வே துறைகளில் உடன் இருந்தனர்.

    சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் கணேஷ் கூறியதாவது:-

    வாணியம்பாடி நியூடவுன் ெரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின்படி சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதாக இருந்தது முதலில் நிறுத்தப்பட்டது அது இன்னும் நிலுவையில் உள்ளது.

    ஏனெனில் ெரயில்வே சுரங்க பாதை அமைய உள்ள இடத்தின் மிக அருகில் ஏரி உள்ளது. மேலும் அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலம் கட்டும் பகுதியின் அருகாமையில் தான் வெளியேறிச்செல்லும் நிலையும் உள்ளது.

    இதனால் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆதலால் சுரங்கப்பாதை கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் வழங்கி உள்ள மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதற்காக மாநில அரசு நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றி இடத்தை ஒதுக்க வேண்டும்.

    மேலும் ெரயில் நிலையம் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய ெரயில் நிலைய அலுவலக கட்டிடம் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் நவீன கட்டிடங்கள் கட்டப்படும், பயணிகள் நிற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
    • இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் உள்ளது. இங்கிருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையின் நடுவில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் அதை வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அருகே கண்மாய் ஒன்று உள்ளதால் அந்த கண்மாயில் இருந்து வரும் கசிவு நீரானது இந்த சுரங்கப்பாதையில் வந்து நிரம்பி வருகிறது.

    இதனால் ஆண்டு முழுவதும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் முத்துப்பட்டி, நெற்புகப்பட்டி, நடராஜபுரம், பணங்குடி, பாகனேரி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று கல்லல் நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் மூழ்கிவிடும். அப்போது இந்த தண்ணீரை அகற்றுவதற்கு குறைந்தது ஒருவார காலம் வரை ஆகும். மேலும் இந்த சுரங்கப்பாதை உள்ள இடத்தின் அருகே விவசாய தேவைக்காக கண்மாய் ஒன்று உள்ளது.

    இந்த கண்மாயில் உள்ள தண்ணீர் கசிவு காரணமாக அங்கிருந்து கசிந்து வந்து இந்த சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி வருகிறது. தற்போது கோடைக்காலமாக இருந்தாலும் கூட கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளதால் அந்த தண்ணீர் இ்ந்த சுரங்கப்பாதைக்கு வந்து நிரம்புகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி சென்று கல்லல் சென்று அதன் பின்னர் காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர இந்த கிராமத்தில் இரவு நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால் இங்கு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரை காரணம் காட்டி அவர்கள் வரமறுத்து விடுகின்றனர்.எனவே மாவட்ட கலெக்டர் நேரில் இங்கு வந்து பார்வையிட்டு அருகில் கண்மாயில் இருந்து வெளியேறும் கசிவு தண்ணீரை சரி செய்ய பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ரெயில்வே துறை சார்பில் இதற்கு நிரந்தர தீர்வும் காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • பனிச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 172 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் சுரங்கத்துக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தனர்.

    இதுதொடர்பாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து சென்றனர்.

    அவர்கள் பனிச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    ×