search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் மழை பெரம்பூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது- வாகன ஓட்டிகள் அவதி
    X

    சென்னையில் மழை பெரம்பூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது- வாகன ஓட்டிகள் அவதி

    • அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகனங்களை திருப்பிவிட்டனர்.
    • மேம்பால சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கடந்த சில மாதங்களாக மழைநீர் செல்ல பணிகள் நடை பெற்றன.

    சென்னை:

    தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் பலத்த மழை இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப் பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், மாடம்பாக்கம், கோவிலம்பாக்கம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு பலத்த மழை கொட்டியது. பலத்த மழை காரணமாக ஓட்டேரி, பேரன்ஸ் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் பெரம்பூரில் உள்ள முரசொலிமாறன் மேம்பால சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகனங்களை திருப்பிவிட்டனர். ஆனால் பெரும்பாலானோர் தேங்கி தண்ணீரில் வாகனங்களை ஓட்டிச்சென்றதால் அவர்கள் வாகனங்கள் பழுதாகி நின்றன. இதையடுத்து அவர்கள் தண்ணீரில் வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்றனர்.

    இந்த மேம்பால சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கடந்த சில மாதங்களாக மழைநீர் செல்ல பணிகள் நடை பெற்றன. ஆனால் இன்று சிறிது நேரம் பெய்த மழைக்கே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மழைநீர் செல்ல முறையான பணிகள் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

    இதேபோல் அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி முன்பு மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு கடந்த சில நாட்களாக பணிகள் நடந்து வருகின்றன. பலத்த மழை காரணமாக கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்கி ஆறாக ஓடியது. மழைநீருடன் கலந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு வெள்ளமாக காட்சி அளித்தது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றமும் வீசியது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியதால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் திடீர் மழை காரணமாக மழைநீர் கால்வாய் மற்றும் மெட்ரோ ரெயில் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. இத னால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    Next Story
    ×