search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முடிவா?
    X

    சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முடிவா?

    • ராஜபாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முயற்சி நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், மூடப்பட்ட ரெயில்வே கேட்டுக்கு மாற்றாக டி.பி.மில்ஸ் சாலையையும், எதிர்ப்புற சாலையையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல் சுலபமாக ரெயில் பாதையை கடக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிகள் நிறைவேறி இடையூறில்லாத போக்குவரத்து உருவாகும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

    அந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டி உள்ளது. அந்த திட்டவரைவை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில்வே துறை தனது பொறுப்பில் சுரங்கப் பாதை நிறுவுவதற்குரிய காங்கிரீட் பாலங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகளை முற்றிலும் கைவிடும் முயற்சிகள் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கையறு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நகரின் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளன. மாணவர்கள், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகள் தாமதம் காரணமாக துவண்டு போய் கிடக்கும் நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    இந்தநிலையில் உள்ளாட்சி மக்கள் மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன நிர்வாகங்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டம் கை விடப்படுவதை தடுத்துநிறுத்தி, சுரங்கப் பாதை திட்டத்தை எந்த தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என ராஜபாளையம் ரெயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×