செய்திகள்
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல்
இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 91 லட்சத்தை கடந்து இருக்கிறது. மேலும் சுமார் 1.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்பது பலரின் கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஐந்து மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருப்பதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 11 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய செய்திகளை குறிக்கும் கிராபிக்ஸ் இடம்பெற்று இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பிரதமர் மோடி இதுவரை புதிதாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது. சில மாநிலங்களில் இரவு நேரத்தில் மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி எட்டு மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி கேட்டறிந்தார். மேலும் தடுப்பு மருந்துகளை விநியோக பணிகளுக்கு தயாராக இருக்க கேட்டுக் கொண்டார்.
அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று இந்தியாவில் புதிதாக ஊரடங்கு உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.