செய்திகள்
பிரசாந்த் கிஷோர்

பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்-மந்திரி நிதிஷ்குமார்: பிரசாந்த் கிஷோர் கிண்டல்

Published On 2020-11-17 02:15 GMT   |   Update On 2020-11-17 02:15 GMT
நிதிஷ்குமாருக்கு முதல்-மந்திரி பதவியை பாஜக அளித்ததுள்ளது குறித்து பிரபல தேர்தல் நிபுணரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்துள்ளார்.
பாட்னா :

பீகார் மாநில முதல்-மந்திரியாக ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் நேற்று 7-வது முறையாக பதவியேற்றார். நடந்து முடிந்த தேர்தலில் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சி இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும், அதில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு வெறும் 43 இடங்களே கிடைத்தன. ஆனால் பா.ஜனதா 71 இடங்களை பெற்றது. எனினும் நிதிஷ்குமாருக்கே முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா அளித்தது.

இதை சுட்டிக்காட்டி பிரபல தேர்தல் நிபுணரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து அவர் கூறுகையில், ‘பா.ஜனதாவால் நியமிக்கப்பட்ட முதல்-மந்திரியாக பதவியேற்றிருக்கும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள். சோர்வடைந்த மற்றும் அரசியல் ரீதியாக குறைகூறப்பட்ட தலைவருடன் பீகார் மாநிலம் இன்னும் சில ஆண்டுகள் மந்தமான ஆளுகையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு காலத்தில் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது அவரை எதிர்த்து கருத்துகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News