செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை கடந்தது- 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு தொற்று

Published On 2020-11-08 04:31 GMT   |   Update On 2020-11-08 04:31 GMT
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 78.68 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தற்போது தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய நோய்த்தொற்றுகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
 
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,07,754 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 559 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,121 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,68,968 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 49,082 பேர் குணமடைந்துள்ளனர். 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,12,665 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News