செய்திகள்
டெல்லியில் டிராக்டரை எரித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- பாஜக கடும் விமர்சனம்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த செயலுக்கு பாஜக விமர்சனம் செய்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது, பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியைச் சேர்ந்த 15 முதல் 20 பேர், ஒரு டிரக்கில் டிராக்டரை ஏற்றிக் கொண்டு வந்து ராஜபாதையில் அதனை இறக்கி, மன்சிங் சந்திப்பில் தீயிட்டுக் கொளுத்தினர்.
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்த வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர் காங்கிரசாரின் இந்த செயலுக்கு பாஜக தரப்பில் கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது.