செய்திகள்
கோப்பு படம்

ஓணம் கொண்டாட்டம் எதிரொலி - கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் - முதல்மந்திரி பினராயி விஜயன் எச்சரிக்கை

Published On 2020-09-03 22:16 GMT   |   Update On 2020-09-03 22:16 GMT
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என அம்மாநில் முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் நேற்று 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 
625 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவுக்கு கேரளாவில் இதுவரை 315 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கேரளாவில் கடந்த 31 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட சற்று குறைவாகவே இருந்தது.

சந்தைகள், வணிகவளாகங்கள் என பொதுவெளிகளில் மக்கள் நடமாட்டம் சற்று அதிகரித்தது. இதனால் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கேரளாவில் பரிசோதனை செய்யப்படுபவர்களில் கொரோனா உறுதி செய்யப்படுவர்களின் சதவிகிதம் கடந்த புதன்கிழமை 7.7 ஆக இருந்தது. ஆனால் நேற்று அந்த சதவிகிதம் 8 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், ஓணம் கொண்டாட்டம் எதிரொலியாக மாநிலத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கலாம் என கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,’ ஓணம் கொண்டாட்டத்தின்போது மக்கள் பொதுஇடங்களுக்கு அதிக அளவில் சென்றதும், பயணங்கள் மேற்கொண்டதன் விளைவாக மாநிலத்தில் கொரோனா சமூக பரவலாக உண்டாகலாம். அடுத்த 2 வாரங்கள் மிகவும் முக்கியமானதாகும்’ என்றார்.

Tags:    

Similar News