செய்திகள்
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு

புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு: கர்நாடகத்தில் ஒரே நாளில் 6,128 பேருக்கு கொரோனா

Published On 2020-07-31 03:55 GMT   |   Update On 2020-07-31 03:55 GMT
கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 6 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு புதிதாக 83 பேர் பலியாகியுள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாளாக 5 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று வைரஸ் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேபோல் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 83 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பு 2,238 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், கர்நாடக அரசு மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பாதிப்பு குறையவில்லை. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் புதிதாக 6,128 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 2,233 பேர், மைசூருவில் 430 பேர், பல்லாரியில் 343 பேர், உடுப்பியில் 248 பேர், பெங்களூரு புறநகரில் 224 பேர், கலபுரகியில் 220 பேர், பெலகாவியில் 202 பேர், தட்சிண கன்னடாவில் 198 பேர், தார்வாரில் 180 பேர், ராய்ச்சூரில் 166 பேர், சிவமொக்காவில் 143 பேர், பாகல்கோட்டையில் 126 பேர், சிக்கமகளூருவில் 126 பேர், விஜயாப்புராவில் 124 பேர், உத்தரகன்னடாவில் 120 பேர், ராமநகரில் 106 பேர், துமகூருவில் 104 பேர், ஹாசனில் 94 பேர், கதக்கில் 88 பேர், மண்டியாவில் 87 பேர், தாவணகெரேயில் 86 பேர், சிக்பள்ளாப்பூரில் 82 பேர், கொப்பலில் 78 பேர், பீதரில் 69 பேர், யாதகிரியில் 58 பேர், ஹாவேரியில் 58 பேர், சித்ரதுர்காவில் 47 பேர், கோலாரில் 32 பேர், சாம்ராஜ்நகரில் 32 பேர், குடகில் 24 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு கர்நாடகத்தில் மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர். அதாவது பெங்களூருவில் 22 பேர், மைசூருவில் 9 பேர், உடுப்பியில் 4 பேர், கலபுரகியில் 7 பேர், பெலகாவியில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், தார்வாரில் 8 பேர், பாகல்கோட்டை, உத்தரகன்னடா, பீதர், கோலாரில் தலா 2 பேர், ஹாசனில் 6 பேர், சிவமொக்கா, சிக்கமகளூரு, துமகூரு, கதக், தாவணகெரே, கொப்பல், யாதகிரி, ஹாவேரியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தொற்று பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,238 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 46 ஆயிரத்து 694 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 3,793 பேர் அடங்குவர். 69 ஆயிரத்து 700 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 620 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 13 லட்சத்து 13 ஆயிரத்து 856 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதில் நேற்று மட்டும் 38 ஆயிரத்து 95 மாதிரிகள் பரிசோதனை அடங்கும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News