செய்திகள்
கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 63 சதவீதம், உயிரிழப்பு 2.72 சதவீதம்- சுகாதாரத் துறை மந்திரி தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 63 சதவீதமாக உள்ளது என்றும், கொரோனா தொற்று சமூக பரவலை எட்டவில்லை என்றும் சுகாதாரத்துறை மந்திரி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய்த்தடுப்பு பணிகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 63 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.72 சதவீதம் தான். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவலை இல்லை. அதிகபட்ச பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக, சோதனைகளை அதிகரித்து வருகிறோம்.
தினமும் சுமார் 2.7 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா மிகப்பெரிய நாடாக இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டவில்லை. சில பகுதிகளில் மட்டும் பரவல் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 7,93,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 26,506 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,95,513 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,76,685 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.