செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை - மியான்மரின் ஆங் சான் சூ கியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது மட்டுமின்றி, உயிர் பலியையும் வாங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவை விட , உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 32 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மியான்மர் நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கியுடன் ஆலோசனை நடத்தினேன்.
அப்போது கொரோனா பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் சுகாதார சவால்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம். மியான்மருக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.