செய்திகள்
கொரோனா வைரஸ்- அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி போனில் பேச்சு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி போனில் பேசியுள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 59 ஆயிரத்து 128 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
அந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 76 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்து வருகிறது. 21 நாட்கள் ஊரடங்கு தடை உத்தரவை மீறியும் சிலர் அலட்சியமாக செயல்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி போனில் பேசினார். கொரோனாவுக்கு எதிராக போராட, இரு நாடுகளும் முழு பலத்தை வழங்க ஒப்புக்கொண்டோம் என மோடி தெரிவித்தார். தற்போதைய நிலையில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.