செய்திகள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதை சாப்பிட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்ததா?
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி பொதுமக்கள் அதுபோன்ற உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்ததாக தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருவதையொட்டி, சமூக வலைதள பதிவுகளில் பெரும்பாலானவை பொது மக்கள் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றியே இருக்கின்றன. எனினும், இவற்றில் பல பதிவுகள் எவ்வித உண்மைத்தன்மையும் இன்றி பதிவிடப்படுகிறது. இவற்றை பார்க்கும் பொதுமக்கள் அவை உண்மை என்ற கண்ணோட்டத்தில் பின்பற்ற தொடங்குவதோடு, அதனை பகிரவும் செய்கின்றனர்.
அவ்வாறு வைரலாகும் பதிவுகளில் ஒன்று, உலக சுகாதர மையம் பொதுமக்களை பேக்கரி உணவு வகைகளை உட்கொள்ள வேண்டாம் என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற உணவு வகைகளை கழுவ முடியாது என்பதால், இவற்றின் மூலம் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் இருப்பதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
வைரல் தகவல் பற்றிய ஆய்வில் உலக சுகாதார பேக்கரி பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்பது போன்று எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என தெரியவந்து இருக்கிறது. பேக்கரி பொருட்கள் மூலம் கொரோனா தொற்று எளிதில் பரவும் என்பதை உறுதிப்படுத்த இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யவும், முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உலக சுகாதார மையம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் பேக்கரி பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார மையம் இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.