செய்திகள்
பிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
21 நாட்கள் ஊரடங்கு காரணமாக, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் பிற மாநில தொழிலாளர்களுக்கு பஸ் விட வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிற மாநிலங்களுக்கு சென்று வேலை பார்த்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். பலர் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்துசெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் பலர் ஓட்டல்கள், விடுதிகளில் தங்கியுள்ளனர். அவர்களும் செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
எனவே தேசிய அளவில் ஒரு அறிவுரை வழங்க வேண்டும். அவர்களுக்காக ஒரு முறை பஸ் போக்குவரத்து விடவேண்டும். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட வேண்டும். இது 21 நாட்கள் ஊரடங்கு தோல்வி அடைந்ததாக ஆகாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.