செய்திகள்
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேவையானவை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனிதவள துறை மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள 190-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கி சொந்த ஊர் திரும்பமுடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனிதவள துறை மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ஊரடங்கு உத்தரவால் ஊர் திரும்ப முடியாமல் பல்வேறு மாணவர்கள் விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் எவ்வித தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.