செய்திகள்
இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி - சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா
கர்நாடக இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்த ராமையா ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 சட்டசபை தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இதற்கிடையே, இன்று காலை 8 மணிக்கு 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே பாஜகவினர் முன்னிலை பெற்று வந்தனர். காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தல் தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்த ராமையா ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று சட்டசபை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.