செய்திகள்
சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் ராஜினாமா ஏற்பு- பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு
சிவசேனாவைச் சேர்ந்த மத்திய மந்திரி அரவிந்த் சாவந்தின் ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து, அவரது துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
- சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த், மத்திய மந்திரி சபையில் இருந்து ராஜினாமா செய்தார்.
- அரவிந்த் சாவந்த் கனரக தொழில் மற்றும் பொது நிறுவன துறை மந்திரியாக பதவி வகித்தார்.
- அரவிந்த் சாவந்த் வசம் இருந்த துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றும், சிவசேனாவின் அதிரடி நிபந்தனைகளால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. முதல்வர் பதவியை விட்டுத் தருவதற்கு பாஜக சம்மதிக்காததால் அக்கட்சியுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டது.
‘
மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அரவிந்த் சாவந்தின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். மோடியின் பரிந்துரையின் பேரில் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அரவிந்த் சாவந்த் வசம் இருந்த கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.