செய்திகள்
நவ்ஜோத் சிங் சித்து

பாகிஸ்தான் செல்ல அனுமதி கேட்டு மத்திய மந்திரி, வெளியுறவு துறைக்கு சித்து மீண்டும் கடிதம்

Published On 2019-11-07 11:33 GMT   |   Update On 2019-11-07 11:33 GMT
கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு செல்ல அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ நவ்ஜோத் சித்து இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

சீக்கியர்கள் விசா இன்றி பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரா சென்று வழிபட்டு வருவதற்கான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இந்தியா -பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகின.

அதன்படி பஞ்சாப்பில் தேராபாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாராவுக்கு இடையே (சர்வதேச எல்லையில் இருந்து) 4 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழித்தடத்தை குருநானக்கின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 9-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திறந்து வைக்கிறார். இவ்விழாவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன நவ்ஜோத் சிங் சித்துவிற்கு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 



இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு சித்து இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு பாகிஸ்தான் சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். ஒரு தாழ்மையான சீக்கியராக வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குருநானக் பாபாவிற்கு வணக்கம் செலுத்துவது மிகப்பெரிய கவுரவம் ஆகும். 

இதுதொடர்பாக ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, இந்நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News