செய்திகள்
கோவா ஆளுநராக சத்யபால் மாலிக் பதவியேற்றார்
கோவா ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் சத்யபால் மாலிக் இன்று ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.
பனாஜி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. யூனியன் பிரதேச அந்தஸ்து கடந்த மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரிஷ் சந்திரா முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டு பதவியேற்று உள்ளனர்.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் ஆளுநராக செயல்பட்டு வந்த சத்யபால் மாலிக், கோவா ஆளுநராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கோவா ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் சத்யபால் மாலிக் இன்று ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.