செய்திகள்
தேவேகவுடா

காங்கிரஸ்-பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: தேவேகவுடா

Published On 2019-10-30 07:27 GMT   |   Update On 2019-10-30 12:18 GMT
கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று ஜே.டி.எஸ், கட்சி மூத்த தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் - ஜனதா தளம் (ஜே.டி.எஸ்.) கூட்டணி ஆட்சி 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் கவிழ்ந்தது. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

இதற்கிடையே ஆட்சி கவிழ்ந்ததற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தான் காரணம் என்று ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா. ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று ஜே.டி.எஸ், கட்சி மூத்த தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.



கர்நாடக இடைத்தேர்தலில் ஜே.டி.எஸ். கட்சி தனித்து போட்டியிடவே விரும்புகிறது. காங்கிரஸ் அல்லது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. இருகட்சிகளிடம் இருந்து சம நிலையில் தூரத்தை கடைப்பிடிப்போம்.

இரு தேசிய கட்சிகளும் நம்பிக்கைக்கு உரியவை கிடையாது. ஒரே குணாதிசயங்களை கொண்டவை தான்.

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு காங்கிரசார் என்னிடம் கூட்டணி ஆட்சி அமைக்க பேசினர். முதலில் நான் அதை ஏற்கவில்லை.

ஆனால் தொடர்ந்து காங்கிரஸ் வற்புறுத்தியதால் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News