செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - செப். 5 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

Published On 2019-08-29 11:10 GMT   |   Update On 2019-08-29 11:10 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
 
இதற்கிடையே, சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. 

இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்படலாம் என்பதால், அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். அதாவது, ஆகஸ்ட் 29-ம் தேதி (வியாழக்கிழமை) வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்கள் முடிந்த நிலையில், ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.



அப்போது, சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என கூறவில்லை. மாறாக, பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ள ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கைதுக்கு முன்னதாகவே முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு செய்து விட்டார், முன் ஜாமீன் கோருவது மனுதாரரின் உரிமையாகும்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, 2017-ம் ஆண்டு கைது செய்யவில்லை, ஆனால் தற்போது கைது செய்துள்ளனர். கணக்கில் வராத ஒரு வங்கி கணக்கையோ, சொத்தையோ அமலாக்கத் துறையை காட்டச் சொல்லுங்கள் என வாதாடினார்.

இதையடுத்து, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News