செய்திகள்
பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம்

இந்திராணி முகர்ஜியை பார்த்ததே இல்லை- கார்த்தி சிதம்பரம்

Published On 2019-08-22 07:21 GMT   |   Update On 2019-08-22 07:21 GMT
இந்திராணி முகர்ஜியை பார்த்ததோ, பேசியதோ கிடையாது என்று டெல்லி விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.
புதுடெல்லி:

கார்த்தி சிதம்பரம் எம்.பி. இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

எனது தந்தையை கைது செய்து இருப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு மட்டும் குறி வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்து குறி வைத்துள்ளது. தற்போது நான் ஜந்தர்மந்தரில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன்.

எனது தந்தை சி.பி.ஐ.க்கு பயந்து ஓடி ஒளிந்து விட்டதாக தகவல் பரப்பினார்கள். எனது தந்தை ஓடி ஓளிய எந்த அவசியமும் இல்லை. அதுபோல சி.பி.ஐ. முன்பு ஆஜராவதற்கு எந்த சட்ட தேவையும் ஏற்படவில்லை.

எனது தந்தை மீது குற்றம் சுமத்த சி.பி.ஐ. பல தடவை முயன்றது. ஆனால் ஒரு தடவை கூட சி.பி.ஐ.க்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. நீண்ட நாட்களாகவே சி.பி.ஐ. எங்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறது.

மோடி அரசை எனது தந்தை மிக கடுமையாக ஆழமாக விமர்சனம் செய்து வருகிறார். அதனால் தான் அவர் மீது இத்தகைய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குக்கு எந்த அடிப்படை சட்ட ஆதாரமும் இல்லை.

அதுபோல அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை. ஆனால் இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். இதற்கு முன்பு சி.பி.ஐ. யாரிடமும் இப்படி நடந்து கொண்டது இல்லை.

எனக்கு சி.பி.ஐ. 20 தடவை சம்மன் அனுப்பியது. நான்கு தடவை சோதனை நடத்தினார்கள். இந்தியாவில் இதுவரை யாரிடமும் ஒரு வழக்குக்காக 4 தடவை வீடு புகுந்து சோதனை நடத்தியது இல்லை. ஆனாலும் அவர்களால் வழக்குப்பதிவு செய்ய இயலவில்லை.


என்னை ஐ.என்.எக்ஸ். மீடியாவில் இந்திராணி முகர்ஜியுடன் தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டுகிறார்கள். நான் இந்திராணி முகர்ஜியை பார்த்ததோ, பேசியதோ கிடையாது.

பைகுல்லா ஜெயிலில் என்னையும் இந்திராணியையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் நான் இந்திராணியையே பார்த்து இருக்கிறேன். அப்படி இருக்கும்போது நான் தவறு செய்ததாக எப்படி சொல்ல முடியும்.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
Tags:    

Similar News