செய்திகள்
ஒரே ஆண்டுக்குள் 3 முதல் மந்திரிகளை இழந்த டெல்லி
தலைநகர் டெல்லி, ஒரே ஆண்டுக்குள் மூன்று முதல் மந்திரிகளை இழந்துள்ளது.
புதுடெல்லி:
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), மாரடைப்பால் டெல்லியில் நேற்றிரவு காலமானார்.
இவர் மத்திய மந்திரியாக 7 முறை பதவி வகித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, 2வது வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர். டெல்லியின் முதல் மந்திரியாக கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருந்தவர்.
கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித் மாரடைப்பினால் காலமானார். அவர் 3 முறை டெல்லி முதல் மந்திரியாக பதவி வகித்தவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், மதன்லால் குரானா காலமானார். இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல் மந்திரியாக பதவி வகித்து வந்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஒரே ஆண்டில் 3 முதல் மந்திரிகளை இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.