செய்திகள்
மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்

பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி அறிவிப்பு

Published On 2019-07-17 05:40 GMT   |   Update On 2019-07-17 06:53 GMT
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அரசு சொல்லவே இல்லை என்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசு அடைவதை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுப்புற சூழலுக்கும், காற்றுக்கும் கேடு விளைவிக்காத மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து 150 சிசி திறனுக்கும் குறைவான இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

மத்திய பட்ஜெட்டிலும் மின்சார வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது.

இதற்கு பதிலளித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-



பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அரசு சொல்லவே இல்லை. டிரக்ஸ் மற்றும் இதர வாகனங்கள் சாலையில் தொடர்ந்து பயணிக்கும். நமது எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது.

நமது பொருளாதார பலத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த செயல் திட்டம் உள்ளது. அதனால் வரும் ஆண்டுகளில் எரிபொருள் தேவை அதிகரிக்கும். இன்னும் சில ஆண்டுகளில் அதிகம் எரிபொருள் பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை இயக்குவதற்காக அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை மின்சார வாகனங்கள் பூர்த்தி செய்யும். அதனால்தான் மின்சார வாகனங்களுக்கு பட்ஜெட்டில் சலுகை அளிக்கப்பட்டது.

2020 ஏப்ரல் முதல் யூரோ-6 எரிபொருள் மற்றும் வாகன என்ஜின்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசும், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News