செய்திகள்

கேரள முதல்வரின் கோரிக்கை குறித்து நாளை முடிவு - அமைச்சர் எஸ்பி வேலுமணி விளக்கம்

Published On 2019-06-20 17:07 GMT   |   Update On 2019-06-20 17:07 GMT
கேரள முதல்வரின் கோரிக்கை குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு என்றெல்லாம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார்.

இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக் பதிவிட்டில், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவ தயாராக இருக்கிறோம். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்ப தயார்.  இது குறித்து தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரெயில் மூலம் பிற மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு திட்டம் உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கேரள முதல்-மந்திரியின் கோரிக்கை குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார் அதில்,

கேரள முதல்வரின் கோரிக்கை குறித்து நாளை முடிவு செய்யப்படும். சென்னைக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 525 மி.லி. தண்ணீர் தேவைப்படுகிறது. கேரள அரசு தினமும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தருவதாக தெரிவித்துள்ளது. கேரள முதல்வரின்  கோரிக்கையை முதலமைச்சர் நிராகரிப்பு என வெளியான தகவல் உண்மை அல்ல என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News