search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sp velumani"

    கோவை மாவட்டத்தில் 400 ஏக்கரில் உருவாக உள்ள தொழில் பூங்கா மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். #SPVelumani
    கோவை:

    நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது-

    தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    நாராயணசாமி நாயுடுவுக்கு அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரது வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என 14.6.2017-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது.

    இதற்காக 20.1.2018-ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த அரசின் முதல்வர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தானே முதல்-அமைச்சராக உள்ளார் என இந்த ஆட்சியை 10 நாளில், ஒரு மாதத்தில் கலைத்து விடுவோம் என எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் கூறியது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கான்கிரீட் போட்டு ஸ்டிராங்காக உட்கார்ந்து உள்ளார். இந்த ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. விவசாயிகள் உள்பட அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    கோவையில் 400 ஏக்கரில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சமீபத்தில் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதுவரை பதவியில் இருந்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 50 ஆண்டு இல்லாத அளவுக்கு கோவை மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது. 70 ஆண்டு கனவான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நமது முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் 80 சதவீத விபத்து குறைந்துள்ளது. திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அவினாசி சாலை மேம்பாலம் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. தாய்லாந்து, பெங்களூருவில் உள்ளது போல் இந்த மேம்பாலம் அமையும். இந்த ஆட்சியில் அனைத்து மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். #SPVelumani
    கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடிநீர், சாலை பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    கோவை:

    கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கோவை மாநகராட்சி, தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகும். முதல்- அமைச்சர் தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றிட மாநகராட்சி அலுவலர்கள் சிரத்தையுடன் பணியாற்றிட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில், தெருவிளக்கு வசதிகள், குடிநீர் தேவைகள், கழிவுநீர் வடிகால்வசதி, சாலைவசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளில் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்கிறது.

    எனவே கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுகின்றதா என்று மண்டல அளவிலான அலுவலர்கள் தினந்தோறும் களஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும், தினந்தோறும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முழுசுகாதார துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு எரியாத தெருவிளக்குகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக சீர் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி மற்றும் சத்யநாராயணன், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
    அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார். #AmmaCanteens #MinisterSPVelumani
    சென்னை:

    தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அடித்தட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. 

    இந்த உணவகங்களில் காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்குப் பொங்கல் வழங்கப்பட்டது. மதிய வேளையில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை  சாதம், கீரை சாதம் என அனைத்தும் தலா ரூ.5 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இரண்டு சப்பாத்தி 3 ரூபாய் தான். உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருப்பதுடன், விலை குறைவாகவும் கிடைத்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

    இந்நிலையில், சமீப காலமாக அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. உணவகங்களில் கூட்டமும் குறையத் தொடங்கியது.

    இதையடுத்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். உணவுகளின் தரத்தை சோதனை செய்த அவர், தரமான உணவுகளை வழங்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த சோதனைக்குப் பிறகு, சிந்தாதிரிப் பேட்டை அம்மா உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, அம்மா உணவகங்களில் தரம் குறைந்த உணவுகளை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    தமழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் ஒப்புதல்  கிடைத்ததும் உணவகங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். #AmmaCanteens  #MinisterSPVelumani
    கோவையில் 20 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SPVelumani
    கோவை:

    கோவையில் புதிய பஸ் போக்குவரத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்திற்கு புதிய பஸ் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன்படி கோவை கோட்டத்திற்கு 43 பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் கோவை மண்டலத்திற்கு 10 பஸ்களும், திருப்பூர் மண்டலத்திற்கு 28 பஸ்களும், ஈரோடு மண்டலத்திற்கு 5 பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கோவை கோட்டத்திற்கு உட்பட்ட புதிய பஸ்கள் தொடக்க விழா கோவை உக்கடத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    அதன்படி கோவை திருச்சிக்கு 2 பஸ்களும், ராமேஸ்வரத்திற்கு 2 பஸ்களும், குமுளிக்கு 2 பஸ்களும், திருவண்ணாமலை, சிவகாசி, நெல்லை, கும்பகோணத்திற்கு தலா ஒரு பஸ்களும் புதிதாக இயக்கப்படுகிறது.

    புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா வழியில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்.

    தமிழக மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை அறிந்து அதனை செயல்படுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி வருகிறார்கள். மேம்பாலம், சாலை விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், மல்டி லெவல் கார் பார்க்கிங், மெட்ரோ ரெயில் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    சென்னையில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இங்கிலாந்து டி 40 நிறுவனத்துடன் சேர்ந்து 80 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    கோவையிலும் 20 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் செலவுகள் குறையும். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 20 ஆயிரத்து 440 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய பஸ்கள் தொடக்க விழாவில் கலெக்டர் ஹரிஹரன், போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் முத்து கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், ஓ.கே. சின்னராஜ், குணசேகரன், தனியரசு, தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. அப்துல் ஜப்பார், சி.டி.சி தொழிற்சங்க செயலானர் சி.டி.சி.சின்ராஜ்பகுதி செயலாளர்கள் விமல் சோமு, செல்வகுமார் மற்றும் காட்டூர் செல்வராஜ்,பப்பாயா ராஜேஷ், பால முரளி, காலனி ராஜ்குமார், எம்.பி.பாண்டியன், கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். #ADMK #SPVelumani #Thirupparankundram
    கோவை:

    கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா டூரிஸ்ட் டாக்சிஓட்டுனர் தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்க தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

    தமிழகத்திற்கு கனமழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 மண்டலத்தில் ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதே போல் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    மழையால் தேங்கும் நீரை உறிஞ்ச பம்பு செட், மரம் அறுக்கும் எந்திரம், ஜே.சி.பி. எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மழை அதிகமாக பெய்யும் இடங்களை கண்டறிந்து அதனை சமாளிக்கும் நிலை இருக்கிறது. பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அவரிடம் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆன போது நீங்கள் துணை முதல்-அமைச்சர் பதவி கேட்டதாக டி.டி.வி. தினகரன் கூறுகிறாரே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் அளிக்கும் போது, டி.டி.வி. தினகரன் நிறைய காமெடி செய்கிறார். டி.டி.வி. தினகரனை கட்சியில் இருந்து விலக சொன்னது நானும் தங்கமணியும் தான்.

    திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆர்.கே. நகரில் 20 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது போல் திருப்பரங்குன்றத்தில் இது செல்லுபடியாகாது. தினகரன் கனவு பலிக்காது.

    எடப்பாடியும், ஒ.பி.எஸ்சும் அண்ணன்-தம்பியாக இருக்கிறார்கள்.

    தினகரன் 10 வருடங்கள் கட்சியில் இல்லை. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. தினகரனுக்கு ஓ.பி.எஸ். முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என்றார்.

    அவரிடம் துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக கவர்னர் பன்வாரிலால் குற்றம்சாட்டி உள்ளாரே? என கேட்டதற்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.  #ADMK #SPVelumani #Thirupparankundram
    ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உதயநிதி ஸ்டாலினும் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகளை தெரிவித்துள்ளனர். #MinisterSPVelumani #UdhayanidhiStalin
    சென்னை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லா அமைச்சர்களுமே ஊழல் செய்கின்றனர். இவர்கள் விரைவில் சிறைக்கு போவார்கள். அதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்” என்று பேசினார்.

    இதற்கு பதில் அளித்து உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்க க(கு)ளத்தில் இறங்கி பார்த்து பேசுங்க தம்பி. எழுதிக்கொடுக்கறதை அப்படியே பேசறீங்களே சரிபார்க்காமல்! வாங்களேன் எங்க ஊர் குளங்களை பார்க்க. தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கிறது. கோவை ஒரு முன் உதாரணம் என தமிழ்நாட்டுக்கே தெரிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் எப்பவுமே களத்துல தான் இருக்கேன் வேலு மணிண்ணே. உங்கள் ஊழல் குளம் கோவையில் இருப்பதற்கான ஆதாரத்தை போட்டோவா போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன் உதாரணமாக கொண்டு வந்தவர் நீங்கள். விரைவில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பதில் சொல்ல தயாராக இருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் குளங்களின் இன்றைய புகைப்படங்கள் என்ற தலைப்பில் செல்வசிந்தாமணி குளம், சிங்காநல்லூர் குளம், கிருஷ்ணாம்பதி குளம், வாளாங்குளம், பெரிய குளம் மற்றும் நரசம்பதி குளம் ஆகியவற்றின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார்.  #MinisterSPVelumani #UdhayanidhiStalin
    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #TNMinister #SPVelumani
    சென்னை:

    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கோவை மாநகராட்சியில் டெண்டர்கள் ஒதுக்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

    தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய உறவினர் செந்தில்நாதன் நிறுவனத்துக்கு மட்டும் பெரும்பாலான ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ. 350 கோடி வரை மாநகராட்சியில் ஊழல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து கடந்த செப்டம்பர் 10-ந்தேதி லஞ்ச ஓழிப்புத்துறை இயக்குனரிடம், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் செய்தார். அந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட கோரி ஆர்.எஸ்.பாரதி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #TNMinister #SPVelumani
    இலங்கை இறுதிக்கட்ட போரில் தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட கோர தாக்குதலுக்கு, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
    கோவை:

    இலங்கையில் ராஜபக்சேவுக்கு உதவிய தி.மு.க-காங்கிரஸ் கட்சியினரை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கையில் நடைபெற்ற போருக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த உதவிகளை கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசின் பொருளாதார உதவிகளால் தான் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளை சூறையாடியது என்பதும், பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும், தமிழ் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும் ராஜபக்சே வாயிலாக வெளிவந்து விட்டது. இந்த கொடூர தாக்குதலை மனிதாபிமானமற்ற செயல் என ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கண்டித்தது.

    ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய கொடூர படுகொலைகளுக்கும், தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதலுக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம். அதற்கு உதவியிருப்பதால் தி.மு.க.-காங்கிரசை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக காங்கிரஸ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.

    மத்தியில் மந்திரி பதவிக்காகவும், 2006-ல் அமைந்த மைனாரிட்டி தி.மு.க. அரசை காப்பாற்றி கொள்ளவும், ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசின் துரோக நடவடிக்கைக்கு தி.மு.க. துணை நின்றதை மறக்க முடியுமா?. அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்று அறிவித்து ஒரு மணி நேரம் நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தை முடித்து இலங்கை தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, போர் நின்று போனது என்று அறிவித்த பின்னர் பதுங்கு குழியில் இருந்த நம்முடைய அப்பாவி தமிழர்கள், தமிழ் சொந்தங்கள் 50 ஆயிரம் பேர் வெளியே வந்தனர். அவர்களை குண்டு போட்டு அழித்தனர். இதற்கெல்லாம் கருணாநிதியும் அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், காங்கிரசும் தான் காரணம்.

    இன்று ஒரு பேப்பரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் கொடுத்து முதல்-அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மீது கொடுத்தீர்கள். மூன்றாவதாக தான் என் மீது புகார் கொடுத்தீர்கள். அந்த அளவிற்கு என் மீது பயம். என்னையும், அமைச்சர் தங்கமணி மீதும் ஏன் புகார் சொல்கிறீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு இந்த கட்சி ஏதோ சூழ்நிலையில் இரண்டாக பிரிந்தது.

    நானும், தங்கமணியும் இரு சகோதரர்கள் போன்று செயல்பட்டு இந்த கட்சி சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கிறோம். இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த ஆட்சி 10 நாளில் போய் விடும். ஒரு மாதத்தில், 2 மாதத்தில் போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆண்டை தாண்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டல விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவர் ஒன்றும் வாரிசு அடிப்படையில் முதல்-அமைச்சர் ஆகிவிடவில்லை. சாதாரண அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து மேலே வந்தவர். டி.டி.வி. தினகரன் போன்று புறவாசல் வழியாக வரவில்லை.

    மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தமிழகத்துக்காக என்ன செய்தீர்கள். கோவை மாவட்டம் 50 ஆண்டு கால வளர்ச்சியை கண்டுள்ளது. கோவை மாவட்டத்திற்காக என்ன திட்டங்கள் கேட்டாலும் முதல்- அமைச்சர் செய்து கொடுக்கிறார். நான் அமைச்சர், அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். மு.க.ஸ்டாலின் உங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவி, தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு. அப்போது தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களுக்கு தி.மு.க. கொடுத்தது மின்வெட்டு மட்டும் தான். ஆனால் மின்வெட்டை சரி செய்தது ஜெயலலிதா அரசு.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம் உள்பட கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.
    ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார் என்று சூலூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூரில் ஒன்றிய அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.

    சூலூர் சட்டமன்ற தொகுதி எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. இது ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் போல் அல்லாமல் மாவட்ட மாநாடு போன்று இருக்கிறது. ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், தற்போது அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க.வின் மீது ஊழல் குற்றம் சாட்ட தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யாமல், குடும்பத்தை செல்வ செழிப்பாக மாற்றியவர்கள் கருணாநிதி குடும்பத்தினர்.

    ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் சூலூர் தொகுதியில் அதிகளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சாலை விரிவாக்கம், கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். எனவே நாங்கள் ஓட்டு கேட்க மக்களை உரிமையோடு நாடி வருவோம். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்வது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்வது போன்றதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுசாமி, எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாதப்பூர் பாலு நன்றி கூறினார்.
    என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். #MinisterVelumani
    புதுடெல்லி:

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு டெல்லியில் நேற்று விருது வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசை கவிழ்க்க வேண்டும், அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். உள்ளாட்சி துறையை சிறப்பாக நிர்வகித்த காரணத்தால் விருது கிடைத்து இருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சித்துறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பணிகளை செய்துள்ளேன். ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் ரூ.7 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நானும், அமைச்சர் தங்கமணியும் உறுதுணையாக இருந்து வருகிறோம். கட்சியின் “நமது அம்மா’ பத்திரிகை, அரசின் சாதனைகளை விளக்க தொடங்கப்பட உள்ள டி.வி. ஆகியவற்றை முடக்குவதற்காக தான் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

    விதிமுறையை மீறி டெண்டர் விட்டதாக கூறுகிறார்கள். நான் அமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சிறிய தவறு கூட செய்யவில்லை.



    உலக பணக்காரர்கள் வரிசையில் மு.க.ஸ்டாலின் குடும்பம் 10-வது இடத்தில் உள்ளது. கலைஞர் டி.வி.க்கு பணம் வந்தது எப்படி? என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் என்னை பதவி விலக சொல்கிறார்கள். சரி, நான் அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.

    நான் பதவி விலக தயார். நீங்களும் (மு.க.ஸ்டாலின்) எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. தலைவர் பதவியில் இருந்து விலகி, அந்த பதவியை துரைமுருகனுக்கோ, மு.க.அழகிரிக்கோ கொடுக்க தயாரா?

    என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். நாளையே மு.க.ஸ்டாலின் பதவி விலகினால் நானும் பதவி விலக தயார்.

    இப்போதுகூட திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து, மு.க.ஸ்டாலின் பினாமி சொத்துகள் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு புகார்கள் வந்துள்ளன. அவர்கள் என்ன செய்தாலும் எங்கள் கட்சியையும், ஆட்சியையும் முடக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterVelumani
    அரசு ஒப்பந்தங்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக்கொடுத்து உள்ளாட்சித்துறையை கொள்ளையாட்சி துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

    உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அமைச்சரின் ஆணைப்படி தான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. ரூ.942 கோடி உபரிநிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் இன்றைக்கு ரூ.2,500 கோடி கடனில் மூழ்கியிருக்கிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவர் மீதும் தி.மு.க.வின் சார்பில் ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    அந்த ஊழல் புகார்களின் மீது லஞ்ச ஊழல் கண்காணிப்புத்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், வெட்கமோ அச்சமோ இல்லாமல் ஊழலுக்கு துணைபோனது வேதனையளித்தது. அதனால் ஐகோர்ட்டில் தி.மு.க.வின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, இப்போது அந்த ஊழல் புகார்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விசாரணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சட்ட நெறிமுறைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த பதவியில் நீடிப்பதற்கு தார்மீக ரீதியாக சிறிதும் தகுதியற்றவர் என்பதால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் நியாயமான நேர்மையான சட்டத்திற்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #MKStalin
    கோவை மாவட்டம் வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிவாரண பொருட்களை வழங்கினார்.
    கோவை:

    கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    பொள்ளச்சி -வால்பாறை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது அதனை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    வால்பாறையில் பாரதியார் பல்கலைகழக கலை அறிவியல் கல்லூரி தற்காலிக முகாமில் தங்க வைகப்பட்டுள்ள 95 பேர்களை பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-

    தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே, கனமழை பெய்து வருகிறது. கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த கனமழையில் வால்பாறை நகரம் வாழைத்தோட்டம் ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதியில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக சுமார் 50 வீடுகளும்,டோபி காலனி ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதயில் 30வீடுகளும், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் காமராஜர் நகர் அருகிலுள்ள ஆற்றுப்பகுதியில் 70 வீடுகளும், எம்.ஜி.ஆர் நகர் முதல் ஸ்டேன்மோர் ஒட்டியுள்ள ஆற்றுப் பகுதியில் 25வீடுகளும் பாதிப்படைந்தது.

    அதில் குடியிருந்தவர்களில் சிலர் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். 30ஆண்கள், 45 பெண்கள், 20 சிறுவர்கள் என 95 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, வால்பாறை நகர பகுதியில் தற்காலிக முகாம்களாக அமைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி ஆகிய நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும், உணவு, உடை, போர்வைகள், குடிநீர், மற்றும் மருத்துவவசதி போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கனமழையின் போது, வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் 38-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரங்கள் விழுந்தும், 27-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவும் ஏற்பட்டது. அவை உடனடியாக சரிசெய்யப்பட்டது.

    9-வது கொண்டை ஊசி வளைவில் சாலையில் அடிப்பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பஸ்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலைசீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது இருசக்கர வாகனங்களும், கார்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை - சாலக்குடி சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தமிழக அரசு இயற்கை இடர்பாடுகளை திறம்பட கையாண்டு பொதுமக்களை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் போர்கால அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஹரிஹரன், சி.மகேந்திரன் எம்.பி., கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ,, மாவட்ட வருவாய் அலுவலர்துரை.ரவிச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.பாண்டியராஜன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சினேகா , நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் ஆண்டனி சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×