செய்திகள்

உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் மோடி தியானம்

Published On 2019-05-18 11:35 GMT   |   Update On 2019-05-18 11:35 GMT
உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்து வருகிறார்.
புதுடெல்லி

பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார். 4-வது முறை கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார். தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொள்வார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேதார்நாத்தில் இன்று தங்கும் அவர் நாளை இங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் செல்கிறார். நாளை மாலை அவர் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
Tags:    

Similar News