செய்திகள்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்

Published On 2019-05-07 06:20 GMT   |   Update On 2019-05-07 06:20 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடுகளுக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. #KartiChidambaram #SC #ED
புதுடெல்லி:

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சொந்த அலுவல் காரணமாக இந்த மாதம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அனுமதி அளிக்கும்படி கூறியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தனர். மேலும், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளை ஏற்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதேபோல் கடந்த ஜனவரி மாதமும் பல்வேறு நிபந்தனைகளுடன், கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #KartiChidambaram #SC #ED
Tags:    

Similar News