செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- திருவனந்தபுரம் தொகுதியில் நிர்மலா சீதாராமன் போட்டி?

Published On 2019-01-30 06:46 GMT   |   Update On 2019-01-30 06:46 GMT
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிர்மலா சீதாராமன் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #BJP #NirmalaSitharaman
திருவனந்தபுரம்:

பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜனதா குறி வைத்துள்ளது.

குறிப்பாக திருவனந்தபுரம் தொகுதியை கைப்பற்றவும் இங்கு எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மீண்டும் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்கவும் சக்தி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா ஆலோசித்து வருகிறது.


இது தொடர்பாக பா.ஜனதா மேலிடம் ரகசிய சர்வே நடத்தியது. ராணுவ மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமன் பெயர் திருவனந்தபுரம் தொகுதிக்கு முன் வைக்கப்பட்டது. இது தவிர நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., மாநில பா. ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டது.

இதில் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் போட்டியிட்டால் ஸ்ரீதரன் பிள்ளை தொகுதியை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது தாய் வழியில் கேரளா பூர்வீகம் ஆகும். ஆலப்புழா மாவட்டம் மான் கொம்பு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் அவரை வெளியூர் வேட்பாளர் என்று சொல்ல முடியாது.

கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு கணிசமான அளவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி தங்களது மத வழிபாட்டு நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். போராட்டத்தின் போது அவர்களுக்கு பா.ஜனதா அரணாக இருந்து செயல் பட்டது.

எனவே நிர்மலா சீதாராமன் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று பா.ஜனதா தரப்பில் யோசிக்கப்படுகிறது. மேலும் அவர் மத்திய மந்திரி சபையில் ராணுவ மந்திரியாக பொறுப்பு வகிப்பதால் பெண்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைக்கும். திருவனந்தபுரத்தில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவதன் மூலம் கேரளாவில் மற்ற தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு கணிசமான செல்வாக்கு பெருகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. #BJP #NirmalaSitharaman
Tags:    

Similar News