செய்திகள்

நாட்டு மக்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார்: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

Published On 2018-10-29 01:40 GMT   |   Update On 2018-10-29 01:40 GMT
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாட்டு மக்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். #MallikarjunKharge
பெங்களூரு :

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி சட்டசபை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஆனந்த் நியாமகவுடாவுக்கு ஆதரவாக நேற்று ஜமகண்டி தொகுதியில் பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜமகண்டி அருகே சாவலிகி கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவதாகவும், ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகவும் வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றி விட்டார்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று பிரதமர் குற்றச்சாட்டுகளை கூறினார். தற்போது பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்றிருப்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கும், பிரதமருக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட தயாராகி விட்டார்கள்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது. இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.  #MallikarjunKharge

Tags:    

Similar News