செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு கடந்த மாதம்வரை 83 பேர் பலி
கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இந்த ஆண்டில் நாடு முழுவதும் 83 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Dengueclaimed80lives #Dengueaffected #Denguefever
புதுடெல்லி:
டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோயான டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை பெற்று பலர் குணமடந்துள்ளனர்.
எனினும், ஆங்காங்கே சிகிச்சை பலனின்றி சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த 830 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம்வரை டெங்கு காய்ச்சலுக்கு 83 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 3,660 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 35 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,667 பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 18 பேர் இறந்துள்ளனர். இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 பேரும் மற்ற மாநிலங்களில் ஓரிருவரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Dengueclaimed80lives #Dengueaffected #Denguefever