செய்திகள்

மத்திய அரசுக்கு இலவசமாக கச்சா எண்ணெய் கிடைக்கிறதா ? - ப.சிதம்பரம்

Published On 2018-09-16 11:16 GMT   |   Update On 2018-09-16 12:13 GMT
பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறைக்கப்படும் என பேசிய பாஜக தேசிய தலைவர் அமித ஷாவுக்கு பதிலடியாக கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு இலவசமாக கச்சா எண்ணெய் கிடைக்கிறதா ? என கிண்டல் செய்துள்ளார். #PChidambaram
புதுடெல்லி :

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தில் நிகழ்சி ஒன்றில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம். இந்த விலை உயர்வினால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதற்கான தீர்வை கண்டறிந்து பெட்ரோல், டீசல் விலையை அரசு விரைவில் குறைக்கும் என  தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

பாரதிய ஜனதா கட்சி இலவசமாக கச்சா எண்ணெயை பெறுவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். அதன்பிறகு தான் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தேர்தல் சமயத்தில் புழங்கும் கருப்பு பணத்தால் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். அப்படியெனில் மத்திய அரசு ஒழித்து விட்டதாக கூறும் கருப்பு பணம் எப்படி வந்தது ?.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #PChidambaram
Tags:    

Similar News