செய்திகள்

தொடரும் பாலியல் வன்கொடுமைகள்- இந்தூரில் குழந்தையையும் சீரழித்த கொடூரம்

Published On 2018-04-21 06:18 GMT   |   Update On 2018-04-21 06:18 GMT
சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், இந்தூரில் ஒரு குழந்தையையும் உறவினர் ஒருவர் சீரழித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சத்தீஷ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம் போதி கிராமத்தில் 11 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோரின் உறவினரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

சம்பவத்தன்று சிறுமியை காணாமல் பெற்றோர் தேடியபோது ஒரு வாலிபரின் உடையில் ரத்தக்கறை இருந்தது. அவருடன் தான் சிறுமி கடைசியாக இருந்ததையும் சிலர் பார்த்தனர். அதை வைத்து போலீசார் விசாரித்தபோது அவர் சிறுமியை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிறுவர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (போக்சோ) உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் இடா நகரில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பிந்து (22) என்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். 2 குழந்தைகளின் தந்தையான இவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீதும் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இடா நகரில் கடந்த 16-ந்தேதி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெற்றோருடன் சென்ற போது 7 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இது நடந்த 4 நாளில் மீண்டும் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உத்தரபிரதேசத்தில் ஹமிர்பூர், சித்தார்த் நகர் மாவட்டங்களிலும் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்து இருக்கிறது. சித்தார்த் நகரில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக் காரரும், ஹமிர்பூரில் 14 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவமும் நடந்துள்ளது. இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கற்பழிப்பு குற்றவாளி ஒருவன் 4 மாத கைக்குழந்தையைக் கூட விட்டு வைக்கவில்லை. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை சுனில் பீல் என்ற காமக் கொடூரன் தூக்கிச் சென்று வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் இரக்கமின்றி குழந்தையை தலையில் அடித்து கொலை செய்து இருக்கிறான்.

குற்றவாளி சுனில் பீல் அந்த குழந்தையின் பெற்றோருக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இவர்கள் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறார்கள். ராஜ் வாடா பகுதியில் உள்ள கோட்டையில் இரவு தங்கிய போது இந்த கொடூர சம்பவம் நடந்தது. குழந்தையின் பிணம் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரை தளத்தில் கிடந்தது. போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளி சுனிலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News