செய்திகள்

சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை - காஷ்மீர் முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

Published On 2018-04-15 14:25 GMT   |   Update On 2018-04-15 14:25 GMT
சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகை செய்யும் மசோதாவை கொண்டு வருவதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்துக்கு பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். #FarooqAbdullah #minors
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இரு பா.ஜ.க. மந்திரிகள் ராஜினாமா செய்துள்ள நிலையில், சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகை செய்யும் மசோதாவை கொண்டு வருவதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்துக்கு அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பரூக் அப்துல்லா கூறியதாவது:- 

இந்த கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த அந்த சிறுமி எனது மகளைப் போன்றவள். தற்போது இதுதொடர்பாக இந்த நாடே இன்று விழித்தெழுந்து உள்ளதற்காக கடவுளுக்கு நன்றி!. இதுபோன்ற சம்பங்கள் இனி நடந்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தை இயற்றுவதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை நாம் அவசரமாக கூட்டியாக வேண்டும்.

இந்த சிறப்பு கூட்டத்தின்போது சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகை செய்யும் மசோதாவை கொண்டுவந்து சட்டமாக நிறைவேற்றினால் அது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லதாக அமையும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை இந்த சட்டத்தால் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #FarooqAbdullah #minors
Tags:    

Similar News