செய்திகள்

சாமி விக்ரகத்துடன் யானை மிரண்டு ஓடியது பற்றி தேவபிரசன்னம் - திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு

Published On 2018-04-11 09:15 GMT   |   Update On 2018-04-11 09:15 GMT
யானை மீதிருந்து சுவாமி சிலை விழுந்தது தொடர்பாக தேவபிரசன்னம் பார்க்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

சித்திரை மாத பூஜைகளுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வருகிற 15-ந்தேதி சித்திரை விஷு கொண்டாட்டங்கள் நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் சித்திரை விஷு கனி காணுதல் நடை பெறும். சுவாமி ஐயப்பன் முன்பு காய், கனிகளை படைத்து பூஜைகள் நடைபெறும். அன்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும்.

சில்லரை காசுகளை சபரிமலை கோவில் தந்திரியும், மேல்சாந்தியும் கைநீட்டமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள். இதனால் அன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தொடர்ந்து 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின்போது சபரிமலை சன்னிதானத்தில் இருந்து பம்பை ஆற்றுக்கு ஆராட்டுக்காக யானை மீது சுவாமி ஐயப்பன் விக்ரகத்தை எடுத்துச் சென்றனர். அப்போது யானை மிரண்டு ஓடியதில் சுவாமி சிலை கீழே விழுந்தது. மேலும் சாமி சிலையுடன் சென்ற பூசாரியும் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் யானை மீதிருந்து சுவாமி சிலை விழுந்தது தொடர்பாக தேவபிரசன்னம் பார்க்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வைகாசி மாத பூஜையின் போது சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது தேவபிரசன்னம் பார்த்து அதற்கான பரிகாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News