செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை

Published On 2018-04-10 12:06 GMT   |   Update On 2018-04-10 12:25 GMT
ஏர்செல் மேக்சிஸ் நிதிமுறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். #kartichidambaram #AircelMaxiscase
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் செயற்குழு உறுப்பினராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா என்னும் நிறுவனத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டில் அன்னிய முதலீடு பெற்றுக் கொடுத்ததில் இவர் முறைகேடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையெடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம் சட்டம் மற்றும் பணப்பரிமாற்ற முறைகேடு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடந்து வந்தது.

கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பணப்பரிமாற்ற முறைகேட்டை உறுதிபடுத்துவதற்கான ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியானது.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது.

இதையடுத்து, அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அடுத்தக்கட்டமாக கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் நிதிமுறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதன்முறையாக இன்று விசாரணை நடத்தினர்.

கடந்த 2006-ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற்றுத்தர அந்நாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எந்த சூழ்நிலையில் ஒப்புதல் அளித்தார்? என்பது தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.# kartichidambaram #AircelMaxiscase
Tags:    

Similar News