செய்திகள்

அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றமா? - தலைமை நீதிபதி தகவல்

Published On 2018-04-06 11:05 GMT   |   Update On 2018-04-06 11:05 GMT
அயோத்தி நில பிரச்சனை வழக்கை மூன்று நீதிபதி அமர்வு விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டுள்ளது. #Ayodhya
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.நஜீப் அமர்வு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல கட்டமாக நடந்து வரும் விசாரணையில் இடைக்கால தீர்ப்புகளை வழங்கக்கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், மூல வழக்கின் விசாரணை முடியாமல் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில், அதனை விட முக்கியமான இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, மற்ற தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்னர்தான் இது தொடர்பாக முடிவெடுக்க முடியும் என கூறி வழக்கை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #Ayodhya #TamilNews
Tags:    

Similar News