செய்திகள்
திரிபுரா சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #TripuraElection2018
அகர்தலா:
திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் வந்து நின்று வாக்கு சாவடிகளில் தங்களின் வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்காக 3,214 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை விட17 சதவீதம் குறைவாகும். அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இன்று பதிவான வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவை ஒட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான வங்காள தேசத்துடனான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சாரிலாம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TripuraElection2018 #TamilNews