செய்திகள்
காஷ்மீர்: பொதுமக்கள் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளி - வெளிநடப்பு
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததை கண்டித்து சட்டசபையில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பும் செய்தன.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில், தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், எல்லையை தாண்டி அத்துமீறி பாகிஸ்தான் படை வீரர்களும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தாக்குதல்களில் கடந்த ஆண்டில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், 2016-ம் ஆண்டில் 228 முறை ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வரை 503 ஆக உயர்ந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டமன்றம் இன்று கூடியது. ஆளுநரை வோரா உரையாற்றுவதற்காக சட்டசபைக்கு வந்தார். அப்போது, தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவது குறித்தும், ஊடுருவி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
சட்டமன்ற பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, பொதுமக்கள் படுகொலை, பாதுகாகாப்பு நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
இதனால் கவர்னர் வரும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் மையப் பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர். இதனால் சட்டசபையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
#tamilnews #jammukashmirassembly